பள்ளி ஒன்றுகூடலின் போது மயங்கி விழுந்த 6-ஆம் ஆண்டு மாணவர் பரிதாப உயிரிழப்பு

கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடலில் கலந்து கொண்டிருந்த 6-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை 8.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வரிசையில் நின்றிருந்தபோது, அந்த 12 வயது மாணவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
முதலுதவி வழங்கியப் பின்னர் உடனடியாகப் பள்ளி நிர்வாகம் அம்புலன்ஸ் வாயிலாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அம்மாணவரைக் கொண்டுச் சென்றது.
எனினும், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சவப்பரிசோதனையில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை; இதையடுத்து, ஆய்வுக் கூட விசாரணை முடிவுகள் வரும் வரை இது ஒரு திடீரெ மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



