Latestமலேசியா

பேராக்கில் சொத்து தகராறில் வயதான அண்ணனும் அண்ணியும் வெட்டிப் படுகொலை

மஞ்சோங், மார்ச்-6, பேராக் மஞ்சோங்கில் குடும்ப சொத்து தகராறு, வயதான தம்பதியின் கொலையில் முடிந்திருக்கிறது.

பந்தாய் ரெமிஸ், கம்போங் சீனாவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் சொந்தத் தம்பியே அண்ணனையும், அண்ணியையும் கொலைச் செய்திருக்கிறார்.

அதுவும் செம்பனை குலை அறுக்கும் கத்தியைக் கொண்டு….

தலையிலும் முகத்திலும் படுகாயம் அடைந்த அந்த சீன தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவருக்கும் 74 வயது என மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொலையாளியான 60 வயது மதிக்கத்தக்க நபர் அதே செம்பனைத் தோட்டத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட ஏதுவாக அவர் இன்று மஞ்சோங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என முஹமட் நோர்டின் சொன்னார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், மஞ்சோங் மாவட்ட போலீசைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!