![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-03-52-PM-743.jpg)
கோலாலம்பூர், ஜூன் 5 – மாற்றுத் திறனாளியான ஒங் இங் கியோங்
( Ong ing Keong) என்ற 46 வயதுடைய கார் ஓட்டுனர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் அவர் உட்பட 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக அவர்களின் வாக்குமூலம் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஷாருடின் உசேய்ன் தெரிவித்தார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மெய்க்காப்பாளர், சம்பவம் நடந்த ஹோட்டலைச் சேர்ந்த ஊழியர், சிறப்பு நடவடிக்கை பிரிவின் உறுப்பினர், ஜோகூர் இடைக்கால சுல்தானின் மெய்க்காப்பாளர் , புகார்தாரரின் நண்பர், மருத்துவர் மற்றும் கிரெப் நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவுக்கான இயக்குனர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகாரை மீட்டுக்கொள்வதற்கு முன்வந்தபோதிலும் அவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்த வழக்கை தொடர்வதில் இன்னமும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். விசாரணை அறிக்கை நேற்று காலை மணி 8. 30 அளவில் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் குற்றச்சாட்டு பிரின் தலைவரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டதாக ரஷாருடின் தெரிவித்தார். தாம் தாக்கப்பட்டது தொடர்பில் அந்த மாற்றுத் திறனாளி மே 28ஆம் தேதி நண்பகல் ஒரு மணியளவில் புகார் செய்திருந்தாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ Rusdi Mohd Isa வும் இதற்கு முன் தெரிவித்திருந்தார்.