கெடா, ஏப்ரல் 25 – கெடா, பாடாங் செராயில் அமைந்துள்ள Atta Arthi முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டச் சம்பவத்தின் காணொளி தற்போது வைரலாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சை பதரவைக்கும் அக்காணொளியில் முதியவர் ஒருவரை நாற்காலியைத் தூக்கி அடிக்க செல்வதும், பின் rotan-னால் அவரை பெண் ஒருவர் அடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து, அக்காணொளியைப் பதிவு செய்தவரை வணக்கம் மலேசியத் தொடர்பு கொண்டு அச்சம்பவம் குறித்து அவர் தரப்பு விளக்கத்தை கேட்டறிந்தது.
இது போன்ற கொடுமைகள் அந்த முதியோர் இல்லத்தில் புதிதல்ல என்றார் அச்சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் குரல் மன்றத்தின் தலைவர் டேவிட் மார்ஷல்.
அந்த Atta Arthi முதியோர் இல்லம் சட்டப்பூர்வமாக உரிமம் இல்லாத பராமரிப்பு இல்லம் என்பதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழர் குரல் மன்றத்தின் ஆலோசனையில் வழங்கப்பட்ட போலிஸ் புகாரைத் தொடர்ந்து, தற்போது அந்த முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரான அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் இது போன்று உரிமம் பெறாத முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய டேவிட், இனி அரசாங்கமும் மக்களும் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.