ஷா ஆலாம், டிசம்பர் 14 – அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடர்பில், மலாயா பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாக பணியாளர்கள் சிலரும், ஐந்து ஆசிரியர்களும் செய்திருந்த சீராய்வு மனுவை, ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த கட்டாய தடுப்பூசி திட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், அவர்களின் உரிமைகளை மீறும் செயல் எனும் வாதத்தை நீதிமன்றத்தால் ஏற்க முடியாது என நீதிபதி டாக்டர் ஷானாஸ் சுலைமான் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்கள் மற்றும் முன்னிலை பணியாளர்களுக்கு, கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்கிய அரசாங்கத்தின் செயல், சட்டவிரோதமானதோ, பகுத்தறிவற்றதோ அல்ல. அவர்கள் அரசாங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.
வழக்கு தொடுத்த இரு பிரிவினரும், அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது பிரிவின் கீழ், பொதுச் சேவை ஊழியர் என்ற முறையில், தங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென கூறியுள்ளனர்.
எனினும், அரசியலமைப்புச் சட்டத்தின், ஒன்பதாவது பிரிவின் கீழ், தங்களின் உரிமை எவ்வாறு மீறப்பட்டது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு, குடிமக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. எனினும், நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய சட்டம் எதுவும் இயற்றாதவரை தான் அது பொருந்தும்.
கோவிட்-19 என்பது உலகளாவிய தொற்றுநோய் ஆகும். அதனால், பொது சுகாதாரத்தை உறுதிச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின், ஒன்பதாவது பிரிவின் கீழ், விண்ணப்பதாரர்கள் முன் வைத்துள்ள வாதத்தை நீதிமன்றம் ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.