ஷா ஆலம், ஏப்ரல் 15 – நாட்டின் 10ஆவது பிரதமராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியர்களுக்கு ஏதும் செய்யவில்லை எனக் கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என கூறியுள்ளார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இந்தியச் சமுதாயத்தையும் மறந்து விடாமல், இன பாகுபாடு இன்றி தாம் பணியாற்றி வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியச் சமூகத்தை வலுப்படுத்த இந்திய சமூக உருமாற்ற பிரிவு மித்ரா வாயிலாக அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகின்றது. அது மட்டுமின்றி TEKUN , AMANAH IKTHIAR போன்ற அமைப்புகளின் வழியும் இந்தியர்களுக்கென்று கூடுதல் கடனுதவி திட்டங்கள் ஏறபடுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுக்கான தனக்குக் கடப்பாடு உள்ளது என்றார் பிரதமர். அவ்வகையில், இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் தொடர்ந்து கல்வி மேம்பாடு, தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சி, உபகாரச் சம்பளம், திறன் பயிற்சி என பல சமூக உருமாற்று திட்டங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அன்வார் விளக்கினார்.
நாம் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் மலேசியர்கள் என உணர்வோடு ஒற்றுமையாக இருந்து வேலை செய்தால் எந்த சமூகமூம் பின் தங்கும் நிலை வராது என்றார் பிரதமர்.
முன்னதாக இந்தியாவின் சட்ட மேதையும் சமூக நீதி போராளியுமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 133 பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை ஷா ஆலாமில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பிரதமர் உரையாற்றினார்.
நாட்டில் ஏழ்மை நிலையை ஒழிக்கும் தனது இலக்கில் என்றும் இன பாகுபாடு கிடையாது என்று பிரதமர் உறுதியளித்தார்.