
கோலாலம்பூர், ஜூன்-17-பொதுப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியை விடுத்து, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது என ‘உரிமை’ கட்சியின் தலைவர் Dr. பி. ராமசாமி சாடியுள்ளார்.
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் (UPSI), இஸ்லாத்திற்கு மதம் மாறிய மாணவர்கள் பதிவுச் செய்தால் அவர்களுக்குக் கல்விக் கட்டண உதவி, கடனுதவி உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படும் என வெளியான சுவரொட்டிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சுவரொட்டி அதிகாரப்பூர்வமானது அல்ல என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தாலும், அத்தகையச் சலுகைகள் இருப்பதை அது மறுக்கவில்லை என ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
மதம் மாறிய மாணவர்களுக்குச் சலுகைகள் வழங்கும் இந்த நடைமுறை நாட்டின் மற்ற பொதுப் பல்கலைக்கழகங்களிலும் உள்ளதா என்பதை உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்கள் அறிவையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மதமாற்றத்தை எளிதாக்கும் அமைப்புகளாக மெல்ல மாறிவிடக் கூடாது என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.



