கோலாலம்பூர், டிச 26 – போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கு தலைமையேற்ற சந்தேகத்தின் பேரில் சபா அரசு சார்பற்ற இயக்கத்தின் தலைவரான டத்தோ பிரமுகர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த 40 வயது டத்தோ பிரமுகர் உட்பட அனைத்து சந்தேகப் பேர்வழிகளை புக்கிட் அமான் போதைக் பொருள் துடைத்தொழிப்பு குற்றவியல் மற்றும் கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார். போதைப் பொருள் கும்பலை முறியடிப்பதற்கு முதல் முறையாக அபாயகரமான போதைப் பொருள் சட்டத்திற்கு பதிலாக பாதுகாப்பு குற்றங்களுக்கான (சிறப்பு நடவடிக்கை) 2012 ஆம் ஆண்டு சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் முக்கிய எதிரி போதைப் பொருள் என 1983ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக நம்மிடம் சட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் ஆக்கப்பூர்வமாக இல்லையென அயோப் கான் கூறினார்.
நாங்கள் அதிகமானோரை கைது செய்துள்ளோம். ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லையென அவர் தெரிவித்தார் . போதைப் பொருள் கடத்தலில் அதன் தலைவர்கள் நேரடியாக ஈடுபடுவதில்லை. அவர்களது நடவடிக்கை மாறிக்கொண்டே இருப்பதால் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் அவர்களின் பங்கேற்பை நிருபிப்பதில் சிரமம் ஏற்படுவதாக இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அயோப் கான் தெரிவித்தார்.