புத்ரா ஜெயா, மார்ச்-20 இந்த வெப்பக் காலத்தில் முறையான விளையாட்டு உடைகளை அணிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பு தளர்வு வழங்குவது குறித்து பரீசிலிக்குமாறு, கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தேவை மற்றும் அந்தந்த நிலைமைப் பொருத்து அவர்கள் அம்முடிவை எடுக்கலாம் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியது.
அதே சமயம், நாட்டின் தட்ப வெப்ப நிலை தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டிகளை எந்நேரமும் பின்பற்றி வருமாறும் அவை அறிவுறுத்தப்படுகின்றன.
இந்த வெப்பக் காலம் மட்டுமல்ல, எந்தவொரு திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தையும் எதிர்கொள்வதில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பணியாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் அமைச்சு மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளது.
தத்தம் பகுதிகளில் வெப்ப நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை அணுக்கமாக கண்காணித்து, அவ்வப்போது அதிகாரத் தரப்பின் ஆலோசணைக்கேட்ப அனைவரின் பாதுகாப்பை உறுதிச் செய்வது கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும்.
அவ்வகையில் தேவைப்பட்டால், மாணவர்களின் ஆரோக்கியம் கெடாதிருக்க, வகுப்புக்கு வெளியேயான நடவடிக்கைகளை ஒத்தி வைக்கலாம்.
அதோடு, சுத்தமான குடிநீர் கையிருப்பும் போதுமான அளவில் இருப்பதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உறுதிச் செய்ய வேண்டும்.
முஸ்லீம் அல்லாத அல்லது ரமலான் நோன்பு நோட்காத மாணவர்கள் குடிநீர் கொண்டு வர ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.
அதிக வெப்பத்தால் மாணவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளை நாடுமாறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக நிர்வாகங்களை அமைச்சு அறிவுறுத்தியது.