ஜகார்த்தா, ஏப்ரல் 17 – ஹரி ராயாவை முன்னிட்டு, சொந்த ஊருக்கு திரும்புவதற்காக, இந்தோனேசியாவில் இரு ‘பயணிகள்’ ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் தொடர்பான காணொளியை, @kamerapengawas எனும் சமூக ஊடக பயனர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்ததை அடுத்து, வைரலாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, மேற்கு ஜாவா, சுகபூமி நகரில், பருங்குடா டோல் சாவடிக்கு அருகில், சந்தேகிக்கும் வகையில் பயணித்த ஆம்புலன்ஸை, போலீஸ் அதிகாரிகள் தடுத்து சோதனையிட்ட போது, அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
போக்குவரத்துக்கு எதிராக பயணித்த இரு ஆம்புலன்சுகளை அதிகாரிகள் தடுத்து சோதனையிட்ட வேளை ; அதில், ஒரு ஆம்புலன்ஸில், கவலைக்கிடமான நிலையில் நோயாளி ஒருவர் இருந்தார். மற்றொன்றில், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த இரு நபர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், தங்களின் தவறுக்காக அவ்விருவரும் மன்னிப்புக் கேட்டதாகவும், மீண்டும் அதுபோல செய்ய மாட்டோம் என உறுதியளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அதனால், அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு, பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.