
ஈப்போ, மே-5-ஈப்போ, தாமான் டேசாவிலுள்ள தனது வீட்டில் நேற்றிரவு 70 வயது மாது ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடன் அவ்வீட்டிற்கு விரைந்த போலீசார் ,அங்கு சுயநினைவற்ற நிலையில் அந்த மாதுவின் உடலைக் கண்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் நஜீப் ஹம்சா ( Mohammad Najib Hamzah ) தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அம்மாது இறந்ததை உறுதிப்படுத்தினர்.
அவரது உடல், தலை மற்றும் கழுத்து ஆகியவற்றில் காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவியாக 52 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதோடு பாராங் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமட் நஜீப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.



