
பட்டவொர்த், மே-14 , பினாங்கு முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி மீது, பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்த போது கிட்டத்தட்ட 860,000 ரிங்கிட்டை மோசடி செய்ததாக, 76 வயது ராமசாமி குற்றம் சாட்டப்பட்டார்.
அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான பணத்தை நேர்மையற்ற முறையில் தவறாகப் பயன்படுத்தியதாக, முதல் குற்றச்சாட்டு முதல் 13-ஆவது குற்றச்சாட்டு வரை கூறப்பட்டது.
அதாவது, அறப்பணி வாரியக் குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னரே, தங்க இரத கொள்முதலுக்கான 779,131 ரிங்கிட்ட பணத்தைக் காசோலை மற்றும் தந்தி மணி ஆர்டர் வடிவில் அவர் செலுத்தியுள்ளார்.
பிறை சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமசாமி, அதே போல் தவறான முறையில், மருத்துவச் செலவுகளுக்கு 65,000 ரிங்கிட் காசோலை வடியில் பணம் செலுத்தியதாக 14-ஆவது மற்றும் 15-ஆவது குற்றச்சாட்டுளில் கூறப்பட்டது.
கடைசி 2 குற்றச்சாட்டுகளும், 15,000 ரிங்கிட் மதிப்பிலான 2 காசோலைகள் வடிவில் வழங்கப்பட்ட கல்வி நிதியுதவியை உட்படுத்தியவையாகும்.
மேற்கண்ட அனைத்து குற்றங்களும் 2019 மே 2-ஆம் தேதி முதல் 2023 ஏப்ரல் 18 வரை, ஜோர்ஜ்டவுன் பிராங்கின் மால் மற்றும் கொம்தார் கட்டடங்களில் 2 வங்கிகளில் புரியப்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து ராமசாமி விசாரணைக் கோரிய நிலையில், 78,000 ரிங்கிட் தொகையில் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், அருகிலுள்ள MACC அலுவலகங்களில் மாதமொரு முறை கையெழுத்துப் போட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
வழக்கு வரும் ஜூலை 16-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.