Latestமலேசியா

PH தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது சினம் கொண்ட மலாய்க்காரர் அல்லாதோரே தங்களின் இலக்கு என்கிறது பாஸ்

கோலாலம்பூர் – ஜூன்-8 – அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தயாராவதில், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள மலாய்க்காரர் அல்லாதோரே பாஸ் கட்சியின் முதன்மைக் குறியாகும்.

அதன் உதவித் தலைவர் டத்தோ அமார் அப்துல்லா அவ்வாறு கூறியுள்ளார். மலாய் – முஸ்லீம் கட்சிகள் மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

என்றாலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் மீது பக்காத்தானின் தீவிர ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை எப்படி பாஸ் கட்சியின் பக்கம் இழுப்பது என்பதே தற்போதைய கேள்வியாகும் என்றார் அவர்.

சீர்திருத்தங்கள் தொடர்பில் அளித்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், பக்காத்தான் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், தீவிர மலாய்-முஸ்லீம் நிலைபாட்டினால் அவர்களுக்கு பாஸ் கட்சியையும் பிடிக்கவில்லை.

ஆகவே அவர்களின் மனங்களை எப்படி வெல்வது என்பது பற்றி தான் தாங்கள் தற்போது சிந்தித்து வருவதாக அமார் அப்துல்லா கூறினார்.

இவ்வேளையில் நிலைமையை மோசமாக்கும் வகையில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சியான கெராக்கான் நடந்துகொள்வதையும் அவர் சாடினார்.

பாஸ் கட்சியை ‘மட்டம் தட்டும்’ வகையிலும் பாதிக்கும் வகையிலும் கெராக்கான் பொதுவில் பேசி வருவது, மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவைப் பெறும் முயற்சிக்கு மேலும் தடைக்கல்லாக உள்ளது.

கெராக்கான் பார்க்கப் போனால், DAP பக்கம் சாய்ந்துள்ள சீனர்களின் ஆதரவை எப்படி பெறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென, மலேசியா கினிக்கு அளித்த பேட்டியில் டத்தோ அமார் அப்துல்லா அவ்வாறு கூறினார்.

ஆட்சியமைக்க முடியாமல் எதிர்கட்சியில் இருந்தாலும், 43 இடங்களுடன் மலேசிய நாடாளுமன்றத்தின் தனிப்பெரும் கட்சியாக பாஸ் கட்சி விளங்குவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!