
செப்பாங், ஜூன்-23 – பாதுகாப்புக் கருதி ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட 17 மலேசியர்கள் உட்பட 24 பேர் மலேசியா வந்துசேர்ந்துள்ளனர்.
அவர்களை ஏற்றியிருந்த மலேசியா ஏர்லைன்ஸின் MH781 சிறப்பு விமானம், நேற்றிரவு 11 மணியளவில், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அவர்கள் முன்னதாக
ஈரான் – துர்க்மெனிஸ்தான் எல்லையிலிருந்து
1,120 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைவழி பயணம் மேற்கொண்டனர்.
24 பேரில் 17 மலேசியர்கள் போக, 6 பேர் அவர்களின் பொறுப்பில் உள்ள ஈரானியர்கள், இன்னொருவர் சிங்கப்பூரியர்.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, துர்க்மெனிஸ்தான் மற்றும் தாய்லாந்து தூதரங்களின் உதவியுடன் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் கோலாலம்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
விமான நிலையம் வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள், விரைந்து செயல்பட்ட அரசாங்கத்திற்கு நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையே மூண்டுள்ள சண்டையால், ஈரானில் உள்ள தங்களது பிரஜைகளை உலக நாடுகள் வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.