
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் அதனைத் தெரிவித்தார்.
கடந்தாண்டு 180,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுபட்டனர்; இவ்வாண்டு இதுவரை 186,000 பேரை விடுவித்துள்ளோம்; எனவே ஆண்டு இறுதிக்குள் அவ்வெண்ணிக்கை 200,000 பேரை எட்டுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிரதமரின் உத்தரவுக்கு ஏற்ப, ‘இரண்டாவது வாய்ப்புக் கொள்கையின்’ கீழ் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்வோரை, எவ்வளவு சீக்கிரம் திவாலிலிருந்து விடுவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அரசாங்கம் விடுவித்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த இரண்டாவது வாய்ப்பானது, 200,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத கடன் தொகையைக் கொண்டுள்ள 40 வயதுக்குக் கீழ் பட்டவர்கள், தங்களின் சராசரி வாழ்க்கையைத் தொடரவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது என்றார் அவர்.
2021 முதல் 2025 வரை, 25 வயது முதல் 55 வயது வரையிலான 25,578 பேர் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர்களில், 35 முதல் 44 வயதிலானவர்களே ஆக அதிகமானவர்கள் ஆவர்; அதாவது 10,145 பேர் திவாலானதாக அசாலீனா சுட்டிக் காட்டினார்.