
சியோல், ஆகஸ்ட்-16 – தனது cafe உணவகங்களை வாடிக்கையாளர்கள் தற்காலிக அலுவலகங்களாக மாற்றுவதைத் தடுக்க, ஸ்டார்பக்ஸ் கொரியா, நாடு முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில் தற்போது desktop எனப்படும் மேசைக் கணினி, அச்சு இயந்திரம், power strip எனப்படும் பல்பொருள் சொருகி, partitions அலுவலகத் தடுப்புகள் போன்றவற்றை கொண்டு வருவது தடைச் செய்யப்பட்டுள்ளதாக, ஒவ்வொரு கிளையிலும் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்பக்ஸ் உணவகங்களில் சாதாரணமாக மடிக்கணினிகளில் வேலை செய்துகொண்டே வாடிக்கையாளர்கள் காப்பி குடிப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ஒரு சிலர் அதிகப்படியான உபகரணங்களை கொண்டு வந்து மேசைகளை நிரப்பி நீண்ட நேரம் அமர்ந்துகொள்கிறார்கள்.
இதனால் மற்றவர்களும் ஸ்டார்பக்ஸை பயன்படுத்த முடியாமல் போவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2015-லிருந்து தென் கொரியாவில் காப்பி கடைகளின் எண்ணிக்கை 1 இலட்சமாக இரட்டிப்பாகி, cafe களை படிப்பு மற்றும் வேலை இடமாக மக்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.
தொழில் தரவுகளின்படி, ஒரு காப்பி ஆர்டர் 1 மணி 42 நிமிடங்களுக்கே இலாபகரமான இருக்கை நேரத்தை வழங்கும்; அதற்கு மேல் உரிமையாளர்களுக்கு நட்டமேற்படும் எனக் கூறப்படுகிறது.