
சுங்கைப் பட்டாணி, மே-8-இன்று அதிகாலை, சுங்கைப் பட்டாணி , பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை மணி 5.23அளவில் வீட்டின் பரணில் பாதிக்கப்பட்டவரின் உடலை தீயணைப்புப் படையினர் மீட்டதாக சுங்கைப் பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் ஸாக்கி செனிக் ( Mohd Zaki Senik ) தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டார்.
மேலும் அந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரோடுவா அல்ஷா காரும் , நான்கு மோட்டார்சைக்கிளும் 90 விழுக்காடு சேதம் அடைந்தன.
தீ விபத்துக்குள்ளான வீடும் 80 விழுக்காடு அழிந்தது. அந்த வீட்டின் முன்புறத்தில் இருந்து தீ தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அதிகாலை மணி 4.51-க்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சுங்கைப் பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 22 பணியாளர்கள் கொண்ட குழு, அமான் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



