
கோலாலம்பூர், மே 13 – தலைநகர் LRT மற்றும் MRT நிலையங்களில் ஐந்து பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வங்காளதேச கட்டிடத் தொழிலாளிக்கு உயர்நீதிமன்றம் 18 மாத சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும் விதித்துள்ளது.
குற்றவாளிக்கு நீதிமன்றம் முன்பு விதித்த ஆறு மாத சிறை மற்றும் 14,500 ரிங்கிட் அபராதத் தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் ரத்து செய்து, புதிய தண்டனையை இன்று வழங்கினார்.
கடந்த மே 6ஆம் தேதி, ஜெர்மன் பெண் ஒருவரும், 21 முதல் 28 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் பெண்களும் உட்பட ஐந்து பெண்களின் மரியாதையை மீறும் நோக்கில் அவர்களை கட்டிப்பிடித்தல், தொடுதல் மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுகளை சந்தேக ஆடவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
அதே நேரத்தில் தண்டனை காலம் முடிந்த பிறகு, குற்றவாளியை நாடு கடத்துமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



