
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது பெண் பராமரிப்பாளர், மேல் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. அசஹார் அப்துல் ரஹீம் (ACP Azahar Abdul Rahim) கூறுகையில், இந்த வழக்கு குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று குறிப்பிட்டார்.
ஆரம்ப விசாரணையில், சம்பவம் நடந்தபோது குழந்தை தொட்டிலில் தூங்க வைக்கப்பட்டிருந்ததுடன், பூத்திங் பயன்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தை மயக்க நிலையில் இருந்ததால் அருகிலுள்ள கிளினிக்கிற்கும் பின்னர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டாலும், CPR சிகிச்சைக்குப் பிறகு அக்குழந்தை உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் கழுத்துப் பகுதியில் அழுத்தத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும், மரணத்திற்கான முழு காரணத்தை அறிந்துக் கொள்வதற்கு மேல் ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குழந்தைகள் பராமரிக்கப்பட்ட அந்த வீடு பதிவு செய்யப்படவில்லையென்றும், சட்ட அனுமதியின்றி செயல்பட்டு வந்ததென்றும் நெகிரி மாநில சமூக நலத்துறையான JKM தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மையத்தை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர், பதிவு செய்யப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என JKM அறிவுறுத்தியுள்ளது.



