
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா, முஸ்லீம்கள் மற்றும் மலாய்க்காரர்களின் ஒற்றுமையையை வலியுறுத்தி விடுத்திருந்த செய்தியைத் தொடர்ந்து மந்திரி பெசார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது மட்டும் ஆட்சியாளர்கள், மதம், இனம் எனப் பேசும் சில அரசியல்வாதிகள், அரச முறை இழிவுபடுத்தப்படும் போது மௌனம் சாதிப்பதாக அவர் சாடினார்.
மலேசியா என்பது இன வெறுப்பால் கட்டப்பட்ட நாடு அல்ல என்று குறிப்பிட்ட அவர், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் வரலாற்றைத் திருத்த முற்படுவது ஆபத்தானது என்றார்.
இவ்வேளையில், பொது மக்கள் அனைவரும் நாட்டின் மிக உச்சபட்ச சட்டமான கூட்டரசு அரசியலமைப்பையும், ‘ருக்குன் நெகாரா’ தேசியக் கோட்பாடுகளையும் வெறும் சடங்காகப் பார்க்காமல், அதன் உண்மையான நோக்கத்தை ஆழமாகப் புரிந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமிருடின் கேட்டுக்கொண்டார்.
மன்னராட்சி மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கு முரணாகச் செயல்பட்டு, மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் செயல்களைத் தவிர்க்குமாறு அவர் அனைத்து அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.



