
பேராக், ஜூன்-28-பேராக் மாநிலம், மஞ்ஞோங், சங்காட் கூரிங் (Changkat Kruing) பகுதியில் அமைந்துள்ள சொகமானா தோட்டத்தின் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 31-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த சனிக்கிழமை பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழா, ஒரு சமய நிகழ்வாக மட்டுமின்றி, ஒருகாலத்தில் இந்தத் தோட்டத்தில் வாழ்ந்த குடும்பங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ந்த “வீடு திரும்பும்” (Homecoming) உணர்வுமிக்க ஒற்றுமை விழாவாகவும் அமைந்தது.
இன்று சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வரும் முன்னாள் தோட்டவாசிகளும், அருகிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களும் திரளாக பங்கேற்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு பூஜைகள், தீமிதி வைபவம், அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சி என நாள் முழுவதும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதுபோன்ற ஆலயத் திருவிழாக்கள், அடுத்த தலைமுறையினருக்கு தங்களின் முன்னோர்களும் பெற்றோர்களும் வாழ்ந்த தோட்ட வாழ்க்கையையும் சமூகப் பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்தும் முக்கியமான வாய்ப்பாக இருப்பதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து இந்த மரபைத் தொடர வேண்டும் என்ற கருத்தும் வந்திருந்தோர் மத்தியில் வலியுறுத்தப்பட்டது.



