
கோலாலாம்பூர், ஜூலை-22-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் அம்னோ, ம.சீ.ச மற்றும் ம.இ.கா வேட்பாளர்களுக்குப் பாஸ் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என, பாஸ் தலைமைத்துவம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ் மற்றும் அம்னோ இடையிலான அரசியல் ஒத்துழைப்பு உயர் மட்டத்தில் மட்டுமின்றி, அடிமட்ட உறுப்பினர்கள் அளவிலும் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் நெகிரி செம்பிலானில் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அதோடு, பாஸ் உறுப்பினர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், Yayasan Budi அறக்கட்டளைத் தொடர்பான 47 வழக்குகள் குறித்தோ அல்லது BN வேட்பாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு விவகாரங்கள் குறித்தோ மீண்டும் பேசி அவதூறுகளை எழுப்பக் கூடாது என்றும் உறுப்பினர்களுக்கு பாஸ் தலைமைத்துவம் அறிவுறுத்தியுள்ளது.
நெகிரியில் உள்ள 36 தொகுதிகளில் BN 25 தொகுதிகளில் பக்காதானுடன் நேரடி பலப்பரீட்சையில் ஈடுபட வழிவிட்டு, பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வெறும் 11 இடங்களில் மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.



