
ரெம்பாவ், ஜூலை-24-இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் கோரி, அமெரிக்க வெளியுறவுத்துறை, வாஷிங்டனுக்கான மலேசிய தூதரை அழைத்து விசாரித்துள்ளது.
அதன்போது, அமெரிக்காவுக்கான மலேசிய தூதர் Shahrul Ikram Yaakob, அமெரிக்க அதிகாரிகளிடம் இது மலேசியாவின் நீண்டகால தேசியக் கொள்கை என விளக்கியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை அங்கீகரிக்காத கொள்கைத் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அண்மையில் இரட்டை குடியுரிமை பெற்ற தனிநபர் ஒருவர் அமெரிக்கக் கடப்பிதழில் நுழைந்தாலும், இஸ்ரேல் குடியுரிமை இருப்பது தெரியவந்தவுடன் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
ஆனால், இஸ்ரேலிய குடிமக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற மலேசியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதியாக நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்கு எதிராக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று சில அரசு சார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
மலேசியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்க அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்றும், இதுபோன்ற தலையீடுகள் அனாவசியம் என்பதையும் வலியுறுத்துவதே அதன் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.



