
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20-ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில், தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் மற்றும் ஜோகூர் மாநிலக் கொடிகளை தலைகீழாகப் பறக்கவிட்டதோடு, முறையான வணிக உரிமமின்றி இயங்கி வந்த தொழிற்சாலை வளாகத்தை மூட மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது.
SILC தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் கொடிகள் தலைகீழாகப் பறக்கவிடப்பட்டிருப்பது குறித்து கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் Pandak Ahmad புகாரளித்ததைத் தொடர்ந்து, இஸ்கண்டார் புத்ரி மாநகர மன்றமான MBIP இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
உரிம விதிமுறைகளை மீறியதற்காக வளாகத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டதுடன், அனுமதியின்றி விளம்பரப் பலகை வைத்ததற்காக அபராத நோட்டீசும் வழங்கப்பட்டது.
கொடிகளை உடனடியாகச் சரியான முறையில் ஏற்றுமாறு உரிமையாளருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
போலீஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த 12 வெளிநாட்டு ஊழியர்களின் வேலைப் பெர்மிட்டுகளை சரிபார்ப்பதற்காக அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜோகூரில் இரு தினங்களில் பதிவான இரண்டாவது தலைகீழ் கொடி விவகாரம் இதுவாகும்.



