
கோலாலம்பூர், செப்-08-இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான METMalaysia தெரிவித்திருக்கிறது. காற்றின் திசை, வேகம் மற்றும் மேலும் ஏற்படக்கூடிய எரிமலை வெடிப்புகள் சாம்பலின் நகர்வை மாற்றக்கூடும். எனினும் எரிமலை சாம்பல் மலேசியாவை அடையும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக METMalaysia தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.
தற்போது எரிமலை சாம்பல் இந்தோனேசியாவின் Sunda நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளது. இருப்பினும் செயற்கைக்கோள் தரவுகள், வளிமண்டல நிலைமைகள் மற்றும் உலகளாவிய எரிமலைச் சாம்பல் ஆலோசனை மையங்களின் தகவல்களைப் பயன்படுத்தி METMalaysia நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
Anak Krakatau எரிமலை சாம்பல் பரவலால் இந்தோனேசியாவில் ஆறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஜகார்த்தாவை கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, சியோல்/Incheon, Doha மற்றும் Amsterdam ஆகிய நகரங்களுடன் இணைக்கும் சில விமானப் பாதைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. சாம்பல் மலேசியாவை அடைந்தால், விமானப் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளே முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என Mohd Hisham குறிப்பிட்டார்.
மலேசிய வான்வெளிக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கும் பட்சத்தில், METMalaysia, பொது வான் போக்குவரத்து (CAAM), அரச மலேசிய ஆகாயப்படை, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய இயக்குநர்களுக்கு எச்சரிக்கை அல்லது ஆலோசனை வழங்கப்படும் என்றாரவர்.
இதனிடையே, சரவாக் மற்றும் மேற்கு தீபகற்பத்தின் சில பகுதிகளில் நிலவும் குறைந்த பார்வைத் திறனுக்கு எல்லை தாண்டிய புகைமூட்டமே காரணம் என்றும், அது Anak Krakatau எரிமலைச் சாம்பலால் ஏற்பட்டதல்ல என்றும் METMalaysia தெளிவுபடுத்தியது.



