
கோலாலம்பூர், செப்டம்பர் 11 – நேப்பாளில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியர்களில், தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்த உறுதியான தகவலுக்காக 55 குடும்பங்கள் இரு வாரங்களுக்கும் மேலாகக் காத்திருப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மலேசியர்களின் தற்போதைய நிலை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நேப்பாள அதிகாரிகளுடனான ஒத்துழைப்பு மற்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து வெளியுறவு அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலன்புரி, நிதி மற்றும் ஆலோசனை உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தால், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் குடும்பங்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவ SMART குழுவை அனுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் நன்றி தெரிவித்த குணராஜ், இது அரசியல் விவகாரம் அல்ல, மனிதாபிமானப் பிரச்சினை எனக் குறிப்பிட்டார்.
55 குடும்பங்களும் இரு வாரங்களுக்கும் மேலாகக் காத்திருப்பதால், வெளியுறவு அமைச்சர் உடனடியாக முன்வந்து அவர்களுக்கும் மலேசிய மக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.



