
கோலாலம்பூர், செப்.11– நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், அங்குள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (MKN) செயல்பாட்டு மையத்தை அணுக தங்களது பிரதிநிதிகளை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளுடன் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது உதவும் என அவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன 55 பேரில் 49 குடும்பங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியா-நேப்பாள பேரிடர் குடும்ப ஆதரவுக் குழுவின் பேச்சாளர் மணிவண்ணன் ரெத்தினம், தேடுதல் பணிகளுக்கு உதவும் தகவல்களை குடும்பத்தினர் வழங்க முடியும் என்றார். இது அதிகாரிகளின் பணியில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர் கூறினார்.
பேரிடர் நிகழ்ந்து 17 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஊடக அறிக்கைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மட்டும் போதுமானதாக இல்லை என மணிவண்ணன் தெரிவித்தார். காணாமல் போன 55 பேரின் நிலை குறித்து இதுவரை புதிய தகவல்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
குடும்பத்தினர் பேரிடர் நிகழ்ந்த ஒன்பதாவது நாளிலிருந்து பிரதமர் அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க கோரி வருவதாகவும், இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். காணாமல் போனவர்களில் அவரது சகோதரி கோமதியும் ஒருவர்.
55 குடும்பங்களுக்கும் தெளிவான தகவல்களை வழங்குமாறு Sentosa தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜ் இதற்கு முன் வெளியுறவு அமைச்சரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மீட்புக் குழுவினரின் பணிக்கு பாராட்டு தெரிவித்திருந்த குணராஜ், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நேரடியான மற்று விரிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



