
கான்பூர், செப். 9 – தனது நடவடிக்கைகளை CCTV மூலம் தொடர்ந்து கண்காணித்து, வாழ்க்கை முறையையும் கண்டித்த மாமனாரைக் கொல்ல சுமார் RM25,697 கூலி கொடுத்ததாக இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 63 வயதான மருந்துத் தொழிலதிபர் வினீத் மினோச்சா (Vineet Minocha), தனது வீட்டில் 26 கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது மருமகள் ஷாலு (Shalu), குடும்பத்தின் முன்னாள் ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு நேர விருந்துகளுக்குச் செல்வது, தாமதமாக வீடு திரும்புவது உள்ளிட்டவற்றை மாமனார் தொடர்ந்து கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து, அவரைக் கொல்ல ஷாலு பணம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாமனாரின் மரணம் மாரடைப்புபோல் தெரிய வேண்டும் என்பதே முதலில் திட்டமாக இருந்துள்ளது. ஆனால், வீட்டிற்குள் சென்ற இருவர் அவரை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது ஷாலு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றிருந்தார். இந்தக் கொலைத் திட்டம் குறித்து அவரது கணவருக்கு முன்கூட்டியே தெரியுமா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



