Latestமலேசியா

மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு 3 முக்கிய பரிந்துரைகள்: ‘Gelombang Saksama’ கூட்டமைப்பு வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-21 – மலேசிய இந்தியச் சமுதாயத்தின் சமூக-பொருளாதாரப் பின்னடைவைச் சீரமைக்க 3 முக்கியக் கட்டமைப்புப் பரிந்துரைகளை 19 அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய Gelombang Saksama கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தலைமையிலான பெர்சாமா கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஹோட்டல் அர்மாடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இக்கூட்டமைப்பின் சார்பில் பேசிய கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ, மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 6.5 விழுக்காடாக இருக்கும் இந்தியச் சமுதாயத்தின் நிலைமை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் பின்தங்கியுள்ளது என்றும், அவர்களை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இன்று நமது முன் நிற்கும் கேள்வி இதுதான்: நாம் பலவீனமான 6.5 விழுக்காடு இந்தியச் சமுதாயமாக இருக்கப்போகிறோமா அல்லது வலுவான ஓர் இந்தியச் சமுதாயமாக மாறப்போகிறோமா?” என்று சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.”

எனவே, வெறும் தற்காலிக நிதியுதவிகளை மட்டுமே சார்ந்திருக்காமல், சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வுகளைக் காணும் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவ்வகையில், மலாய்க்காரர்களின் கரங்களை வலுப்படுத்த MARA போன்ற அரசு நிறுவனங்கள் இருப்பது போன்று, இந்தியர்களுக்கும் தனியாக நேரடி அரசு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்…

அடுத்து சிங்கப்பூரில் இந்தியச் சமூகத்தினரின் கல்வி மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம், தனியார் மற்றும் பொது மக்களின் ஒத்தழைப்பில் உருவாக்கப்பட்ட சிண்டா (SINDA) போன்று இங்கும் பிரத்தியேக நிதி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்…

மற்றும் இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் சமூகப் பொருளாதார சவால்களைக் கையாள ஏதுவாக அமைச்சரவை சிறப்பு செயற்குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய மூன்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இப்பரிந்துரைகள் சாத்தியமானவை என்றும் பெர்சாமா கட்சியின் கொள்கை ஆவணங்கள் தயாரிக்கும் போது இவை தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

மேலும், Gelombang Saksama கூட்டமைப்புடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக இந்தியச் சமுதாயத்திற்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் பலன்கள் கிடைக்கவில்லை என்ற கவலையை ஏற்றுக்கொண்ட ரஃபிசி, தலைவர்களின் political will அதாவது அரசியல் உறுதி மற்றும் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!