கோலாலம்பூர், ஜன 31 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் செய்தி நிறுவனமான CNA தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 29 ஆம் தேதி திங்கட்கிழமையன்று மன்னிப்பு வாரியம் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி CNA இவ்வாறு தெரிவித்துள்ளது.
இறுப்பினும் இந்த தகவலை மன்னிப்பு வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் நஜிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த 210 மில்லியன் ரிங்கிட் அபராத தொகையும் குறிப்பிடத்தக்க தொகையாக குறைக்கப்பட்டதாகவும் CNA கூறியுள்ளது.
முன்னந்ள் பேரரசரின் தலைமையில் நடைபெற்ற மன்னிப்பு வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தங்களை அடையாளம் தெரிவிக்காத மூன்று தரப்புக்களின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக CNA தெரிவித்துள்ளது.
1MDB வழக்கு விவகாரத்தில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக அவர் நிறைவேற்றியதைத் தொடர்ந்து அவரது தண்டனை காலம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்வழி நஜீப்பின் தண்டணைக் காலம் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவுக்கு வரும். எனினும் நன்னடத்தைக்கான பாரோல் மூலம் புதிய ஆறு ஆண்டு சிறைத் தண்டனையில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை கழித்த பின் 2026ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் விடுதலையாக முடியும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.