குவந்தான், நவம்பர் 7 – கெந்திங் மலையிலுள்ள, சூதாட்ட மையத்திலிருந்து, 46 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான “காசினோ சிப்புகள்” களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில், ஐந்து ஆடவர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
39 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட உள்நாட்டவர்களான அவர்கள் அனைவரும், இன்னும் நாட்டில் தான் இருப்பதாக, பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.
அந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட 44 வயது ஆடவனும் அதில் அடங்குவான்.
அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கெந்திங் மலை சூதாட்ட மையத்திலிருந்து, 46 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள மொத்தம் ஆயிரத்து 160 சிப்புகள் காணாமல் போனது தொடர்பில், அதன் நிர்வாகத்திடமிருந்து புகார் கிடைத்துள்ளதையும் யாஹ்யா உறுதிப்படுத்தினார்.
CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு அடிப்படையில், அக்டோபர் 20-ஆம் தேதி, காலை மணி பத்து வாக்கில் அந்த சிப்புகள் களவாடப்பட்டது தெரிய வந்துள்ளது.
அன்றைய நாள், காலை மணி ஏழு வாக்கில், அவசர பாதை வாயிலாக, காசினோக்கள் அமைந்திருக்கும் பகுதிக்குள் நுழைந்த இருவர் அந்த சிப்புகளை களவாடிச் சென்றனர்.
அச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை வாயிலாக இதுவரை பத்து பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் வாயிலாக, 428 சிப்புகள் மீட்கப்பட்டுள்ள வேளை ; எஞ்சிய 732 சிப்புகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.