
அம்பாங், மே-24 – கம்போங் தாசேக் அம்பாங்கில் இந்து ஆலயமொன்றை சேதப்படுத்தியதோடு, ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரது தலையைக் கொய்து விடுவேன் என மிரட்டிய வேலையில்லாத ஆடவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாங் செஷன்ஸ் மற்றும் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் கொண்டு வரப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் 33 வயது Sufpriyanndi Masyhuri ஒப்புக் கொண்டான்.
மே 19-ஆம் தேதி காலை 6 மணிக்கு 1 சுத்தியல், இரும்புக் கம்பிகளை வெட்டும் கருவி, 2 பாராங் கத்திகள் மற்றும் 1 கெரிஸ் கத்தியுடன் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்குள் அத்துமீறியதாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தெய்வச் சிலைகளை அவன் சேதப்படுத்துவதை வீட்டிலிருந்தே CCTV கேமராவில் கண்காணித்து கோயிலுக்கு ஓடிய நிர்வாக உறுப்பினரின் கழுத்தில் பாராங் கத்தியை வைத்து அவன் கொலை மிரட்டல் விடுத்தான்.
ஆயுதங்களை வைத்திருந்த அக்குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறையும் 1 மிரம்படியும் விதிக்கப்பட்டது.
அதே நாளில் அதே நேரத்தில் தீய எண்ணத்துடன் அவ்வாலயத்தில் சேதங்களை உண்டாக்கியதாக மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கு 7 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
34 வயது T. மோஹனதாஸ் என்பவரின் தலையை வெட்டி விடப் போவதாக மிரட்டியதாக இன்னொரு மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.