கோலாலம்பூர், டிசம்பர் 13 – சிலாங்கூர், பூச்சோங் சாலை சந்திப்புக்கு அருகில், பெஸ்ரயா நெடுஞ்சாலையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய, நான்கு சக்கர வாகன ஓட்டுனர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அவ்விபத்து தொடர்பான, “டாஷ்கேம்” பதிவு, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில், 30 வயது ஆடவர் தனது மனைவி உட்பட ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரு பிள்ளைகளுடன் பயணித்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.
அதில், மோட்டார் சைக்கிளோட்டியும், அவரது ஒரு பிள்ளையும் காயமடைந்த வேளை ; ஃபோர்டு ரேஞ்சர் நான்கு சக்கர வாகனத்தை செலுத்திய 21 வயது ஆடவன் உட்பட எஞ்சிய யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை, கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் சரிபுதீன் முகமது சாலே உறுதிப்படுத்தினார்.
அவ்விபத்து தொடர்பில், இரு தரப்பினரும் புகார் அளித்த வேளை ; கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாக நம்பப்படும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.