
கிள்ளான், ஆகஸ்ட்-13-கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவில் (Taman Bayu Perdana) உள்ள கடை வீட்டில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 8 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Jalan Batu Unjur 9, Taman Bayu-வில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீப்பற்றியதாக மாலை 5.51 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
கட்டடத்தின் இரண்டாவது மாடி சுமார் 90 விழுக்காடு தீக்கிரையான நிலையில், அந்தச் சிறுவனின் உடலும் அவனது 66 வயது பெரியப்பாவின் உடலும் அங்குள்ள இரண்டு வெவ்வேறு கழிவறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட மேலும் இருவர், தீயணைப்புப் படையினர் வருவதற்குள் பொது மக்களால் காப்பாற்றப்பட்டு தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிள்ளான் துறைமுகம் மற்றும் அண்டாலாஸ் நிலையங்களைச் சேர்ந்த 18 தீயணைப்பாளர்கள் இரவு 10.05 மணிக்கு மீட்புப் பணியை நிறைவுச் செய்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் துறையும், K9 மோப்ப நாய் படையும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.



