
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள சிவ சுப்பிரமணியம் கோயிலில் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில் இந்தியப் பெண் ஒருவரிடம் இருந்து புகார் ஒன்று வந்ததாக ரவூப் மாவட்ட காவல்துறைத் தலைவர் Superintendent Mohamad Shahril Abdul Rahman கூறினார்.
கோயில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் தங்கப் பதக்கமும் காணாமல் போனதாக அப்பெண் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயம் நகைகள் காணாமல் போனது குறித்து மேலும் ஆறு புகார்கள் கிடைத்ததாக Mohamad Shahril தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட சாட்சிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சம்பவம் பற்றி தகவல் தெரிந்தால் விசாரணைக்கு உதவ முன் வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வேளையில், எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டுச் சென்றால் கவனமுடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.



