
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-14-சபாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்வதாகக் கூறி, பொது மக்களிடமிருந்து சுமார் 600,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஏமாற்றிய 12 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.அவர்களில் 7 பேர் சீன நாட்டவர்கள் ஆவர்.
கடந்த வார இறுதியில் கோத்தா கினாபாலு, பெனாம்பாங், கெனிங்காவ் (Keningau) மற்றும் கோத்தா பெலுட் (Kota Belud) ஆகிய இடங்களில் போலீஸ் நடத்திய தீவிர சோதனையைத் தொடர்ந்து இந்த மோசடிக் கும்பல் பிடிபட்டது.
பாரம்பரிய மருத்துவம், நோய் தீர்க்கும் சிகிச்சைகள் மற்றும் கெட்ட நேரத்தைப் போக்கும் பரிகார பூஜைகள் செய்து தருவதாகக் கூறி இந்த கும்பல் மக்களை ஏமாற்றி வந்துள்ளது.
ஜோதிடம் பார்க்கவும் பரிகாரம் செய்யவும் முடியும் எனக் கூறி ஒரு பெண்ணை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கும்பல் அறிமுகப்படுத்தும்.
பின்னர், சிறப்புப் பூஜைகள் மற்றும் மந்திர உருவேற்றுதலுக்காக அவர்களிடம் இருக்கும் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கைமாற்றுமாறு அந்த பெண் வற்புறுத்துவார்.
கடைசியில், பூஜைக்குப் பின் பணத்தையும் நகையையும் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, பிளாஸ்டிக் பைகளில் தேவையற்ற பொருட்களை வைத்து மாற்றித் தந்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்று விடுவார்கள்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே இந்த மோசடிக் கும்பல் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.கைதுச் செய்யப்பட்ட 12 பேரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



