
கோலாலம்பூர், மே-20-பண்டிபுக்யோ வைரஸால் (virus Bundibugyo) ஏற்படும் நோய்ப் பரவல் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைத் தாக்கியுள்ள போதிலும், நாட்டில் இன்றுவரை எந்த இபோலா பாதிப்புகளும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், அனைத்துலக பயணங்கள் மூலம் நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, தயார்நிலை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
துபாய், டோஹா மற்றும் சிங்கப்பூர் போன்ற அனைத்துலக மையங்கள் வழியாகப் பயணிப்பவர்கள் உட்பட, உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் பயணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, இந்த இரு நாடுகளிலிருந்தும் மலேசியாவிற்கு நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து அனைத்துலக நுழைவு மையங்களிலும் தயார்நிலையை மேம்படுத்தியுள்ளதுடன், தற்போதுள்ள தொற்றுநோய் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறியும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்குவது உட்பட, சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான வசதிகளின் தயார்நிலையும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



