புது டெல்லி, ஏப்ரல்-19, 2,600 கட்சிகள், கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்கள், மொத்தம் 6 வாரங்கள் என களைக்கட்டும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல், 7 கட்டங்களாக இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மொத்தம் 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில், 272 இடங்களைப் பிடிக்கும் கட்சியோ அல்லது கூட்டணியோ அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்.
முந்தையை இரு தேர்தல்களைப் போலவே இம்முறையும் பிரதமர் பதவிக்கு பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கும் இடையே தான் நேரடி போட்டி நடக்கிறது.
400 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆவேன் என 73 வயது மோடி சூளுரைத்திருக்கிறார்.
ஆனால், BJP-யின் பத்தாண்டு கால ஆட்டியை முடிவுக்குக் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என 54 வயது ராகுல் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
அதற்காக தமிழகத்தின் திமுக உள்ளிட்ட 27 கட்சிகளைக் கொண்ட மாபெரும் எதிர்கட்சிக் கூட்டணியை ராகுல் உருவாக்கியுள்ளார்.
அனைத்து 543 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு ஜூன் 1-ம் தேதியோடு நிறைவைடைந்ததும், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.