கோலாலம்பூர், மார்ச் 25 – பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது.
2021-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில், 80 ஆயிரத்து 295 மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடங்கினார்கள்.
2022-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை, 79 ஆயிரத்து 154 மாணவர்களாக பதிவானது.
எனினும், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 543-ஆக சரிவு கண்டுள்ளது.
பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள், தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் தொடர் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதில், குறைவான மாணவர்களை கொண்ட தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையும் அடங்கும்.
அதோடு, தமிழ்ப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து கொள்ள ஊக்குவிக்கும் வகையில், DLP எனப்படும் இரட்டை மொழி பாடத் திட்டமும் வழங்கப்படுகிறது.
வேறு மொழி பள்ளிகளில் இருந்து, தமிழ்ப் பள்ளிகளுக்கு மாற விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதிலும், கல்வி அமைச்சுக்கு எந்த தடையும் இல்லை என மேலவைக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, நாடு முழுவதுமுள்ள, தமிழ்ப் பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, 2023-ஆம் ஆண்டு, ஜூன் பத்தாம் தேதி, SLU எனப்படும் தமிழ்ப் பள்ளி நிர்வாக அமர்வு ஒன்றும் நடத்தப்பட்டது.
நாட்டிலுள்ள, தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் மீதான அந்த அமர்வின் வாயிலாக, நடப்பு பிரச்சனைகள், தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பெற்றோர்களை கவரும் வழிவகைகள், மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, பல்வகைத்தன்மையை ஊக்குவிப்பது ஆகியவை குறித்து முக்கியமான விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சரிவை தடுக்க, கல்வி அமைச்சு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து, செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் டத்தோ ஸ்ரீ ஆர். அருணாசலம், மேலவையில் முன் வைத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது.