
கோலாலம்பூர், செப் 25 – செப்டம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் குழுவுக்கிடையிலான சிலாங்கூர் சுல்தான் கிண்ண 2025 கால்பந்து போட்டி, கோலாலம்பூர் மெர்டேக்கா விளையாட்டரங்கில் நடைபெறவிருப்பதால் மாநாகரில் உள்ள 5 முக்கிய சாலைகள் மூடப்படும் என்பதோடு போக்குவரத்திற்காக மாற்று பாதைகள் திறந்துவிடப்படவுள்ளது.
ஜாலான் மகாராஜாலேலா (Bulatan Merdeka ) , ஜாலான் ஹாங் துவா (ஜாலான் ஹாங் ஜெபாட்டை நோக்கி நுழைவது), ஜாலான் ஹாங் ஜெபாட் , ஜாலான் ஸ்டேடியம் மற்றும் ஜாலான் மெர்டேக்கா ஆகிய சாலைகளே அந்த சாலைகளாகும்.
இரவு 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டம், அது முடியும் வரை இந்த சாலைகள் மூடப்பட்டிருக்கும்.
போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகள் பிற்பகல் 2 மணி முதல் தொடங்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் உசுப் ஜன் முகமட் ( Usuf Jan Mohamad ) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போக்குவரத்து சீராகவும் பொதுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவும் கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
எனவே அந்த போட்டியை காண்பதற்கு செல்லும் காற்பந்து ரசிகர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மெர்டேக்கா 118இன் அடிவாரத்தில் அமைந்துள்ள மெர்டேக்கா விளையாட்டரங்கை MRT, மோனோரயில் மற்றும் LRT வழியாக எளிதாக சென்றடையலாம்.