
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-7-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஐஸ் கிரீம் கடையில், மகளுக்காக ஆர்டர் செய்யப்பட்ட கேக்கில் ‘வருங்கால சடலம்’ என்ற அர்த்தத்தைக் கொண்டு வரும் ‘Bakal Jenazah’ என்ற அவமதிப்பான சொல் இடம்பெற்றதாகக் கூறி, ஒரு தந்தை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“என் குழந்தை இறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என அவர் சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பியப் பதிவு வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட கேக் கடை விளக்கம் அளிக்கையில், ஒரு பணியாளர் தனது தனிப்பட்ட உறுப்பினர் கணக்கைப் பயன்படுத்தி ஆர்டரை பதிவுச் செய்ததாகவும், அந்த கணக்கில் இருந்த பெயர் தானாக இரசீதில் அச்சிடப்பட்டதுமே குழப்பத்திற்குக் காரணம் என தெரிவித்தது.
‘Bakal Jenazah’ என்பது அந்தப் பணியாளரின் கணக்கில் பயன்படுத்தப்பட்ட பெயராகும்.
என்றபோதிலும், சம்பந்தப்பட்ட பணியாளர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமலிருக்க கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.



