
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி இஸ்ராலிஷம் சனுசி முன்னிலையில் தனித் தனியாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 22 முதல் 48 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தனர்.
திட்டமிட்ட குற்றச் செயல் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருப்பதால் அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
அவர்கள் அனைவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம்தேதிக்கும் இவ்வாண்டு ஏப்ரல் 27ஆம்தேதிக்குமிடையே செந்துல் கேங் RT6 கும்பலின் உறுப்பினராக இருந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 130 V ( 1) விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டு முதல் 20 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
அவர்களில் எவருக்கும் ஜாமின் வழங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீண்டும் ஜூன் 24 ஆம்தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.



