உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறிமுதல்

உலகக் கிண்ண காற்பந்து போட்டி கடந்த வாரம் தொடங்கியது முதல் , அது தொடர்பான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ( dron) பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
கன்சாஸ் (Kansas) நகரில், புதன்கிழமையன்று ‘அரோஹெட்’ (Arrowhead) மைதானம் மற்றும் FIFA ரசிகர் திருவிழா நடைபெறும் பகுதிகளில், அமெரிக்க கூட்டரசு மற்றும் நகர நிர்வாகத்தின் கூட்டு ட்ரோன் அச்சுறுத்தல் தடுப்புக் குழு எட்டு ட்ரோன்களை இடைமறித்துக் கைப்பற்றியது.
அமெரிக்கா முழுவதும் 2026 உலகக் கிண்ண போட்டிகள் மற்றும் அது தொடர்பான ரசிகர் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள வான்வெளியில் அனைத்து வகையான ட்ரோன்களுக்கு கூட்டரசு விமான நிர்வாகம் தடை செய்துள்ளது.
போட்டி நடைபெறும் எட்டு இடங்களில் தடைசெய்யப்பட்ட வான்வெளியில் 150-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஊடுருவல்கள் கண்டறியப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதில் அட்லாண்டாவில் (Atlanta) மட்டும் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஊடுருவல் சம்பவங்களும் நடந்துள்ளன.
போட்டி நடைபெறும் நாட்களில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் சிறப்பு அனுமதியின்றி, மைதானத்தைச் சுற்றியுள்ள மூன்று கடல் மைல் சுற்றளவு மற்றும் தரைமட்டத்திலிருந்து 3,000 அடி உயரம் வரையிலான வான்வெளியில் ட்ரோன்கள் உட்பட அனைத்து விமான நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடைபெறும் ரசிகர் நிகழ்வுகளின் போது, ஒரு கடல் மைல் சுற்றளவு மற்றும் தரைமட்டத்திலிருந்து 1,000 அடி உயரம் வரையிலான வான்வெளியில் ட்ரோன்களை இயக்க அனுமதி இல்லை



