
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
அந்தச் சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 30 வயது வெளிநாட்டு ஆடவர் மற்றும் பெண்ணை அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர்.
இதன் மூலம் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சிறுவனின் 30 வயது இந்தோனேசியத் தாய் மற்றும் அவரது 34 வயது வங்காளதேச ஆண் நண்பர் ஆகியோர் ஏற்கனவே சிறார் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை, சிறுவன் தனது வாடகை வீட்டில் வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு அவனது உடலில் காயங்கள் மற்றும் காயத் தழும்புகள் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சவப் பரிசோதனையில், தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டதால் சிறுவன் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்காகப் பதிவுச் செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணமடைந்த சிறுவன் உணவப் பணியாளரான இந்தோனேசியப் பெண்ணுக்கும், கடந்தாண்டு மரணமடைந்த ரொஹிங்கியா ஆடவருக்கும் பிறந்தவன் என நம்பப்படுகிறது.



