
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-சர்ச்சைக்குள்ளான போட்காஸ்ட் (Podcast) விவகாரத்தில் இருவர் கைதுச் செய்யப்பட்டு 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் நடவடிக்கையின் நடுநிலைமையைக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் மற்றும் அரச மலேசியப் போலீஸ் படைத் தலைவரிடம் விளக்கம் கோரியுள்ள ராயர், அரசியல் கருத்து சுதந்திரம் அச்சத்தினால் முடக்கப்படக் கூடாது என்றும் இது சீர்திருத்த கொள்கைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டினார்.
இங்கு, போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த போட்காஸ்ட் படைப்பாளர்கள் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இன ரீதியாகச் சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட மதபோதகர் ரிட்டுவான் டீ அப்துல்லா மற்றும் ஜெம்போல் எம்.பி Shamsulkahar Deli மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வேளையில், இவ்வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் சித்தி காசிமும், தப்பியோடாத அல்லது சாட்சியங்களைச் சிதைக்காத நபர்களைத் தடுப்புக் காவலில் வைப்பது முறையல்ல எனத் தெரிவித்துள்ளார்.
3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாகக் கூறி, அந்த போட்காஸ்ட் நிகழ்ச்சி நெறியாளரான 30 வயது ஆடவரும், 60 வயது வர்த்தகரும் நேற்று முன்தினம் கைதாகியது குறிப்பிடத்தக்கது.



