ஈப்போ, ஜனவரி 5 – பேராக், கிரிக், ஜாலான் பாலிங் – குவாலா கங்சார் சாலையில், கம்போங் குவாலா கேநெரிங் அருகே, புலி நடமாட்டம் இருப்பதாக புகார் கிடைத்துள்ளதை அடுத்து, அதனை பிடிக்க, மாநில PERHILITAN – தேசிய பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு துறை பொறிகளை அமைத்துள்ளது.
அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது குறித்து, கடந்த புதன்கிழமை புகார் பெறப்பட்டதை, மாநில பெர்ஹிலிதான் இயக்குனர் யூசோப் சாரிப் உறுதிப்படுத்தினார்.
அதனால், பெர்ஹிலிதானின் புலிப் பாதுகாப்பு பிரிவு, அங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம், அந்த வனவிலங்கு சுற்றித் திரியும் சாத்தியம் உள்ள இடங்களில் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் யூசோப் சொன்னார்.
உணவு தேடி வரும் அப்புலியை, மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு விரட்டி விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, துப்பாக்கி வேட்டு சத்தத்தை எழுப்புவதன் வாயிலாக அல்லது பட்டாசுகளை வெடிப்பதன் வாயிலாக, அதனை அடர்ந்த பாப்புலுட் வனப் பகுதிக்கு விரட்ட முடியுமென தமது தரப்பு நம்புவதாக அவர் சொன்னார்.
முன்னதாக, கம்போங் குவாலா கேநெரிங்கை சேர்ந்த ஆடவர் ஒருவர், கடைக்கு செல்லும் வழியில் புலியை கண்ட சம்பவம், வைரலானது குறிப்பிடத்தக்கது.