
கோலாலம்பூர், மே 14 – இளைஞர்களின் நிலையான வளர்ச்சிப் பாதைக்கான திட்டங்களை இணைந்து உருவாக்கலாம் என மலேசிய – ஆசியான் இளைஞர் SDG உச்ச நிலை மாநாடு 2025 இல் உரையாற்றியபோது இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் அனைத்துலக இளைஞர் மையத்தின் துணை இயக்குனர் எஸ்.பத்மசீலன் வலியுறுத்தினார். அரசு, தனியார்துறை மற்றும் சிவில் சமூகத்திற்கிடையே உள்ளடக்கிய மற்றும் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை பத்மசீலன் எடுத்துரைத்தார் . இளைஞர்களிடம் கலந்தாலோசிப்பது மட்டுமில்லாமல் தேசிய மற்றும் வட்டார நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பொது – தனியார் கூட்டாண்மைகள் மூலம் வளங்களை திறக்க முடியும் என்பதோடு திறன்களை உருவாக்கலாம். மேலும் இளைஞர்களின் வளர்ச்சிக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் இணைந்து உருவாக்கலாம் என்று சீலன் தெரிவித்தார்.
ஒன்றிணைந்து மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாட்டில் , மலேசிய மற்றும் ஆகியான் வட்டாரத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு உறுப்பினர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட 300 இளைஞர்கள் கலந்து இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டனர். சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதுடன் 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய கூட்டாண்மைகளை வளர்க்கவும் ஒரு துடிப்பான தளமாக இந்த உச்சநிலை மாநாடு அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இளைஞர் அமைப்புகளுடன் நீண்டகால மதிப்பு சார்ந்த ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பத்மசீலன் அழைப்பு விடுத்தார். சீரமைக்கப்பட்ட திட்டங்களை வடிவமைப்பதில் இளைஞர் அமைப்புகள் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும் பத்மசீலன் கேட்டுக்கொண்டார்.