புத்ராஜெயா, டிச 24 – பேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் தாம் ‘k***g’ என்ற வார்த்தையை புத்தகத்திலிருந்து மேற்கோளுக்காக பயன்படுத்தியதாகவும் மாறாக எந்தெவொரு தரப்பையும் அவமதிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
ஹிகாயத் ஹாங் துவா என்ற தலைப்பிலான புத்தகத்தில் இடம் பெற்றிருந்த வார்த்தையை பயன்படுத்தியதாகவும் ஹாங் துவாவை நினைவு கூறும் கதையான அதில் மலாய், அரபு, சியாம் மற்றும் ‘K***g’ போன்ற பல மொழிகளின் ஆற்றலை அவர் பெற்றிருந்ததை குறிப்பிடுகிறது.
அந்த மொழியும் கலிங்க என்ற பதத்திலிருந்து வந்தது. ஆனால், இப்போது ‘K****g’ வார்த்தையை பலர் விரும்புவதில்லை என்பதால் தாமும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லையென அன்வார் கூறினார்.
இதில் எவருக்காவது தவறான புரிதல் இருந்தால், தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எவரையும் அவமதிப்பது தமது நோக்கம் அல்ல என அன்வார் கூறினார். நேற்று புத்ராஜெயாவில் மின் மற்றும் ஊடகங்களின் மூத்த ஆசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.