
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவாலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் (ACP Hanyan Ramlan), இது தொடர்பாக இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, 76 வயது பெண் மற்றும் 69 வயது ஆண் ஆகிய இருவரின் உடலிலும் காயங்கள் மற்றும் அடிபட்ட தடயங்கள் காணப்பட்டதுடன், அவர்கள் படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை பராமரிப்பு மைய நிர்வாகம் மறுத்துள்ளது. முதியவர்கள் தவறி விழுவதைக் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக, குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மட்டுமே அவ்வாறு செய்யப்பட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



