பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் சிலை திருட்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு மனநலப் பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு

ஜோர்ஜ்டவுன், ஜூன்-23-பினாங்கு, தண்ணீர் மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் துர்க்கை அம்மன் சிலையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 56 வயது மாதுவை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி அதிகாலையில், இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எஸ். ஷானுதேவி (S. Shanudevi) எனும் அம்மாது மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ‘இருமுனை மனநல பாதிப்பு’ அல்லது _bipolar disorder_ இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவருக்குப் பிணை மறுக்கப்பட்டதோடு, பேராக்கில் உள்ள உலு கிந்தா பஹாகியா மனநல மருத்துவமனையில் தங்கி ஒரு மாத கால மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்த மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இவ்வழக்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.



